விவசாயிகளுக்கான வானிலை சார்ந்த வேளாண்மை குறித்த பயிற்சி
கன்னிவாடி 23 ஜனவரி, 2018: தமிழகத்தில் மாறிவரும் பருவநிலையின் காரணமாக வேளாண் தொழில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய வானிலைத் துறை மற்றும் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய தெற்கு வேளாண் தட்பவெப்ப மண்டலத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு வாரத்தின் இரு நாட்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கான மத்திய கால வானிலை முன்னறிவிப்பு மற்றும் வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வானிலை சார்ந்த விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளும் வகையில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்களை வருகின்ற மார்ச் முதல் வாரத்தில் திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் விவசாயத்தில் வானிலையின் பங்கு, வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள், பருவத்திற்கேற்ற பயிர்ப் பாதுகாப்பு முறைகள், விவசாயத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடிய வானிலை காரணிகள், விவசாயிகள் கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்படும்.
இந்த முகாமில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பெண் மற்றும் ஆண் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சிக் கையேடுகள் அளிக்கப்படும். பங்கேற்பவர்களின் கைபேசிக்கு ஒலிஅஞ்சல் ( வாய்ஸ்மெயில் )வடிவிலும் “வாட்ஸ்ஆப்”; எனும் சமூக ஊடகக் குழுவின் வாயிலாகவும் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் வேளாண் ஆலோசனைத் தகவல்கள் இலவசமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9786138170 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.